சென்னை:  சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது என சென்னைஅண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு  அறிவுரை கூறினார். சட்டப்பேரவையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று வேளாண்மை துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.  தொடர்ந்து, நாளை முதல் பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்க உள்ளது. வரும் வெள்ளிக்கிழமையும், 27ம் தேதியும் விவாதம் நடக்கிறது. 28ம் தேதி விவாத்திற்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள். 29ம் தேதி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை நடக்கிறது.

சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குதல், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடந்தது.  1மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். எதிர்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும். மேலும் மக்கள் நலன்சார்ந்த விஷயங்களை சட்டப்பேரவையில் எவ்வாறு பேச வேண்டும், எடுத்துரைக்க வேண்டும், நடந்து கொள்ளும் விதம் குறித்தும், தேவையற்ற புகழ்ச்சி கூடாது என்றும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.  எதிர்க்கட்சிகள் என்றால் அவையில் விமர்சிக்கத் தான் செய்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வாறு விமர்சிக்கும் போது திமுக உறுப்பினர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், மூத்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன பேச வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக பேச வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 1மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.