நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக தமிழ்நாட்டிற்கு ஏன் மத்திய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் தனி தொகுதி அந்தஸ்தை ரத்து செய்து பொது தொகுதி ஆக்க வேண்டும் என்ற மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு கருத்து கூறினர்.

1967 ம் ஆண்டு 41 தொகுதிகளாக இருந்த தமிழ்நாடு மாநிலத்தின் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை, அதன் பின் 39 தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த தொகுதிகள் குறைக்கப்பட்டதாக சொல்லப்படும் காரணம் ஏற்புடையதாக இல்லை மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநிலங்களை தண்டிப்பது போல் உள்ளது என்று நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் பி. புகழேந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இனி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை காரணம் காட்டி தற்போதுள்ள 39 உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைக்காமல் இருக்கவும் மீண்டும் 41 தொகுதிகளாக உயர்த்தவும் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

1967 க்குப் பின் இதுவரை 14 முறை நடந்த பொதுத் தேர்தலில் தலா இரண்டு தொகுதிகள் வீதம் மொத்தம் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை இழந்திருப்பதால், உத்தேச இழப்பீட்டுத் தொகையாக தலா 200 கோடி வீதம் மொத்தம் 5600 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும், ஒவ்வொரு உறுப்பினரின் எண்ணிக்கையும் மதிப்பு வாய்ந்தது என்பதை 1999 ம் ஆண்டு வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்ததை பாரதிய ஜனதா அரசுக்கு நன்றாக புரிந்திருக்கும்.

மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்காமல், தற்போதுள்ள எண்ணிக்கையை நிலை நிறுத்த மத்திய அரசுக்கு உள்ள திட்டம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

நன்றி : தி இந்து