டெல்லி:   கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை மீண்டும் வழங்க மத்தியஅமைச்சரவை அனுமதித்துள்ளது. இதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய ஆண்டுகளுக்கான  நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை  தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அமைச்சரவை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஒப்புதல் அளித்தது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் நிதியை விடுக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை (MPLADS) மீட்டெடுப்பதற்கும் தொடர்வதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி,  2021-22 நிதியாண்டின் மீதமுள்ள பகுதிக்கு இத்திட்டம் செயல்படும், மேலும், இந்த திட்டம் 2025-26 வரை தொடரும் என்றும் தெரிவித்தார்.

2021-22 நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு ஒரு எம்.பி.க்கு ரூ. 2 கோடி வீதம் ஒரு தவணையாகவும், ஒரு எம்.பி.க்கு ஆண்டுக்கு ரூ. 5 கோடி வீதத்திலும் நிதி வழங்கப்படும்.

2022-23 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை இரண்டு தவணைகளில் தலா ரூ.2.5 கோடி என மொத்தம் ரூ.5 கோடி நிதி விடுவிக்கப்படும் என்றும் கூறினார்.