புதுடெல்லி:
த்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளாா். அவா் தாக்கல் செய்யும் 5-ஆவது நிதிநிலை அறிக்கையாகவும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான தற்போதைய பாஜக அரசின் கடைசி முழுநேர நிதிநிலை அறிக்கையாகவும் இது அமையும்.

இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்களை கவரும் வகையில் இந்த பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய வரி விதிப்புகள் இருக்காது, மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வில் சலுகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக வருமான வரி விலக்கு வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

மேலும் வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின் படி விலக்கு சலுகை என்பது பல வருடங்களாக தொடர்ந்து ரூ.1½ லட்சமாகவே உள்ளது. இது ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் புதிய வேலை வாய்ப்புகள், முதலீடு சார்ந்த வளர்ச்சியை மையமாக கொண்டு இந்த பட்ஜெட் அமையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி முடிவுக்கு வருகிறது. 2வது அமர்வு, மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும். இந்தக் கூட்டத்தொடரில் பி.பி.சி. ஆவணப்பட விவகாரம், சீன எல்லையில் நிலவும் பதற்றம், தொழில் அதிபர் அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.