சென்னை; 356 வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை கலைக்க முயற்சி நடைபெறுவதாகவும், காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை?  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கோவையை பதற்றமான இடமாக மாற்றி விடக்கூடாது என்று வலியுறுத்தியதுடன், தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டு பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு எதிராக காவல்துறை உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம் மூலம் கோவை அமைதியாக இருக்க ஆர்எஸ்எஸ், பாஜக விரும்பவில்லை என தெரிகிறது.

செப்டம்பர் 26 கூட்டத்தில் மாநில முதலமைச்சரை மிரட்டும் விதமாக அண்ணாமலை பேசுகின்றார். அதற்காக அண்ணாமலையை கைது செய்ய வேணடும் என வலியுறுத்தியவர், அண்ணாமலை  தமிழ்நாடு காவல்துறையை மிரட்டுகிறார். அண்ணாமலை காவல்துறை அலுவலர்களை எச்சரிப்பது, நாட்டையே முடக்குவோம் என சொல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? அவர் சாதாரண அரசியல்வாதி இல்லை. ஐபிஎஸ் படித்து விட்டு வந்திருக்கும் நிலையில், வார்த்தைகளின் வீரியம் தெரிந்தே இப்படி பேசுகின்றார். பேட்டை ரவுடியைப் போல பேசுகிறார், அரசியல் கட்சி தலைவர் என்ற அடிப்படை நாகரீகம் இல்லாத வகையில் அவர் பேசுகிறார். இந்த மாதிரி பேச்சை அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு அரசு இதுபோல பேசுபவர்களை நடமாட அனுமதிக்க கூடாது என்றார்.

மேலும், தமிழ்நாட்டில்  356 பிரிவை பிரகடனப்படுத்தி  திமுக ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர திட்டமிடுகின்றனர். ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியவில்லை என்பதால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைக்க முயற்சிக்கின்றனர் என்று சாடியவர், காந்தியை கொன்றதை கொண்டாடியவர்களுக்கு ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கின்றனர். அந்தந்த ஊரில் காவல்துறை முடிவு செய்ய வேண்டியதை நீதிமன்றங்கள் முடிவு செய்கின்றன. காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு என்ன வேலை? நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.

பயங்கரவாத அமைப்பின் பின்னால் நீதிமன்றம் செல்வது வேதனையானது. சவுக்கு சங்கர் என்பவரின் கருத்துகளில் உடன்பாடு கிடையாது என்றாலும், நீதிமன்ற அவமதிப்பில் அவருக்கு அதிகபட்சமாக தண்டணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அந்தளவு தண்டணை கொடுத்தது கிடையாது.

சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மனித நேய மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த இருக்கின்றோம். மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது பாஜக , ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கண்களை உறுத்துகின்றது என்றவர்,  ஆ.ராசாவை மட்டும் குறிவைத்து பாஜக விமர்சிப்பது சாதிய கண்ணோட்டம் என்றுதான் பார்க்கத் தோன்றுகின்றது. இதை வைத்து பாஜக அரசியல் நாடகம் ஆடுகின்றது.

இவ்வாறு தெரிவித்தார்.