டில்லி
மத்திய சுகாதார அமைச்சகம் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் புற்று நோய் பயனாளிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் சென்ற வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காப்பிட்டு திட்டத்தில் நாடெங்கும் பெருமளவில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த திட்டம் சுமார் 1000 க்கும் மேற்பட்ட புற்று நோய் மருத்துவ மனைகளில் நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சை பயனாளிகள் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின்படி நாடெங்கும் ஒவ்வொரு வருடமும் புற்று நோயால் 7.84 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். ஆண்டுக்கு சுமார் 11.57 லட்சம் புதிய புற்று நோயாளிகள் உருவாகின்றனர். சுமார் 22.5 லட்சம் இந்தியர்கள் புற்று நோயுடன் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றனர். இதில் 90000க்கும் மேற்பட்டோர் பிரதமர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடைய சிகிச்சைக்காக ரூ.321 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் 30.376 பேருக்கு மகப்பேறு பகுதிகளான கருப்பை, விதைகள் ஆகியவற்றில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர 28506 பேருக்கு மார்பகப் புற்று நோயும், 21379 பேருக்கு கணையப்புற்று நோயும், 14639 பேருக்கு இரத்தப் புற்று நோயும் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர ஏராளமானோர் புற்று நோயைக் கண்டுபிடிக்காமல் இறந்து விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் தமிழகத்தில் புற்று நோயாளிகள் அதிகம் உள்ளனர். தமிழகத்தில் 40.0556 பேரும் கேரளாவில் 22000 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 19455 பேரும் உள்ளனர். இதற்கு அடுத்த படியாக சத்தீஸ்கரில் 15997 பேரும் குஜராத்தில் 14380 பேரும் உள்ளனர்.