பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க மாட்டார் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளனது.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். நாட்டு மக்களுக்கு பாஜகவிடம் இருந்து நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதியன்று தொடங்கிய இந்த பயணமானது மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது.

தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை நாகாலாந்து, அசாமைக் கடந்து மேற்கு வங்காளத்தில் நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ ஜனவரி 29 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் நுழைய உள்ளது.

அப்போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அதில் பங்கேற்க மாட்டார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிதிஷ்குமார்  ராகுல்காந்தி யாத்திரையில் இருந்து விலகி இருப்பது “இந்தியா” கூட்டணிக் கட்சிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் “இந்தியா” கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும், பீகார் சட்டசபையைக் கலைக்க பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த அதிகாரபூவமற்ற தகவல்களில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை மட்டுமே இலக்காக வைத்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து “இந்தியா” கூட்டணி உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.