கீவ்

ஷ்யா டிரோன்கள் மூலம் உக்ரைனின் முக்கிய நகரங்களைத் தாக்கிய போது 24 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

கடந்த 20 மாதங்களாக உக்ரைன்-ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அவை வழங்கும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவியால் போரில் உக்ரைன் தாக்குப்பிடித்து நிற்கிறது.  சமீப காலமாக உக்ரைனுக்கு வழங்கும் உதவிகள் குறைந்து வருகின்றன.

உக்ரைனுக்கு அதிக அளவில் உதவிகளைச் செய்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அங்குள்ள நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது  எதிர்க்கட்சிகள் இணைந்து அங்கு பணமசோதா நிறைவேற்றுவதை முடக்கின. அமெரிக்க அரசு நிர்வாகமே முடங்கும் சூழல் ஏற்பட்டு உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இதே கருத்தை வருகிற ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுள் ஒருவரான விவேக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார்.  ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உக்ரைன் உள்ளது.  இதையொட்டி 50 ஐரோப்பியத் தலைவர்கள் பங்குபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஸ்பெயின் சென்றுள்ளார்.

நேற்று உக்ரைனின் முக்கிய துறைமுகமான தெற்கு ஒடேசா, மைகோலெய்வ், கிரோவோஹ்ராட் போன்ற பகுதிகளில் ரஷ்யா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது ஈரானில் தயாரிக்கப்பட்ட 29 டிரோன்களை ரஷ்யா அனுப்பியதில் 24 டிரோன்களை ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இது குறித்த சேத விவரங்கள்பற்றிய தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.