நியூயார்க்

முதல் முறையாக பிரேசில் மற்றும் உக்ரைன் அதிபர்கள் சந்தித்து இரு நாட்டு உறவுகள் பற்றிப் பேசி உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த 78-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. கூட்டத்தொடரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டு பேசும்போது, உக்ரைனில் ரஷியா இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என குற்றச்சாட்டு கூறினார்.

அவர், ”ரஷ்யா பல விசயங்களை ஆயுதங்களாக மாற்றி, தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அவை எங்களுடைய நாட்டுக்கு எதிராக மட்டுமின்றி, ஐ.நா. பொது சபை உறுப்பு நாடுகளுக்கும் கூட எதிராகப் பயன்படுத்தப்படுகிறது” எனக் கூறினார். பயங்கரவாதிகள் மேலும் அவர் அணு ஆயுதங்களை வைத்திருக்க எந்த உரிமையும் இல்லை என்று ரஷ்யாவைச் சாடினார்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக, பிரேசில் நாட்டு அதிபரான லூயிஸ் இனேசியோ லூலா டா சில்வாவை, ஜெலன்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசினார். இரு தலவர்களும், இரு நாடுகளுக்கு இடையேயான அமைதியை கட்டியெழுப்புவதற்கான பாதையை வகுப்பதின் முக்கியத்துவம் மற்றும் பேச்சுவார்த்தையை மேம்படுத்துவது ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த இரு நாடுகளின் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்தித்துக் கொள்வது இது முதன்முறை என்று சி.என்.என். செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்த சந்திப்பு நேர்மையாகவும் மற்றும் பயனுடைய ஒன்றாகவும் இருந்தது என  ஜெலன்ஸ்கி கூறினார்.  மேலும் இருதரப்பு உறவுகள் மற்றும் அமைதி முயற்சிகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் பணியாற்றும்படி எங்களுடைய தூதரக குழுவினரை அறிவுறுத்தி உள்ளோம் என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.