டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அமையவிருக்கும் சமஸ்கிருத பல்கலைகழகத்திற்கு, விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயர் சூட்டும் வகையில்,  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பிபின் ராவத், அவர் மனைவி மதுலிக்கா ராவத் ஆகியோர் உடல்கள் நேற்று (டிசம்பர் 11) ஒரே மேடையில் தகனம் செய்யப்பட்டன. இன்று அவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கப்படுகிறது.

இந்த நிலையில், அவரது  சொந்த மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில்,  இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்றைய பேரவையின் விவாதத்தின்போது, அம்மாநில தேவ்பிரயாக் தொகுதி  எம்எல்ஏ வினோத் கன்டாரி ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

அந்த தீர்மானத்தில் தனது தொகுதியான , “தேவ்பிராய்க்கில் கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு மறைந்த முப்படை தளபதி  பிபின் ராவத்தின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த தீர்மானம் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியது. மேலும், டேராடூன் நகரில் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக கட்டப்படும் ‘சைனியா தாம்’ என்னும் நினைவிடத்திற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், ஹரிதுவார் எம்எல்ஏ-வுமான மதன் கௌசிக் தீர்மானம் கொண்டு வந்தார்.  இதன் பிறகு, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.