டில்லி

தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 19 வயதுக்குப்பட்டோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச் சுற்றில் உள்ள இந்திய வீரர்களுக்கு கோலி, ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.   இந்த போட்டியின் முதலாம் அரை இறுதிச் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.  இதன் மூலம் இந்தியா ஏழாம் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

மற்றொரு அரை இறுதிச் சுற்றில் வங்கதேச அணி நியுஜிலாந்து அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றை அடைந்துள்ளது.    ஐசிசி நடத்தும் போட்டிகளில் வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.   இந்தியா வங்கதேச அணிகள் இடையே நடக்கும் இந்த இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த முறை வெற்றி பெற்றால் இந்திய அணி தொடர்ச்சியாக இரு முறையும், மொத்தத்தில் ஐந்தாம் முறையும் உலகக் கோப்பையைக் கைப்பற்றும்.    இந்த வெற்றியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.   தற்போது சீனியர் அணியில் அசத்தும் விராட் கோலி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் முதலில் இந்த அணியில் விளையாடி உள்ளனர்.

தற்போது இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ள இளையோர் அணிக்கு சீனியர் வீரர்களான விராட் கோலி, ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   இந்த வாழ்த்துச் செய்திகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளது.