மும்பை

மும்பை பல்கலைக்கழக பட்டமளிப்பு உடை மாற்ற உள்ளது குறித்து டிவிட்டரில் கடுமையாக விமர்சனம் எழுந்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு நேரத்தில் ஒரு கருப்பு முழு ஆடை மற்றும் தொப்பி ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.     அனைத்துப் பலகலைக் கழகத்திலும் இந்த உடை பொதுவானதாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.   சமீப காலமாக ஆங்கிலேயர் செய்து வந்து சுதந்திர இந்தியாவில் தொடரும் பழக்கங்களை பாஜக அரசு மாற்றி வருகிறது.

அவ்வகையில் மும்பை பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தியாவுக்கு ஏற்றபடி பட்டமளிப்பு உடையை மாற்றி அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டது.    அந்த தீர்மானத்துக்கு இணங்க பட்டமளிப்பு உடை மாற்றப்பட்டு புதிய உடை வடிவம் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய உடையின்படி முன்பு உள்ள முழு கருப்பு உடைக்குப் பதில் பழைய கால ராஜாக்கள் அணியும் ஜரிகை மேலங்கியும் கால் சட்டை மற்றும் தலைப்பாகையும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.   நேற்று வெளியான இந்த புதிய பட்டமளிப்பு உடையின் புகைப்படம் டிவிட்டரில் கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளன.

அந்த விமர்சனங்களில் மாதிரிக்காக ஒரு சில இங்கே தரப்பட்டுள்ளன.

”இதைப் பட்டமளிப்பு எனச் சொல்வதை விட ஒரு வாளையும் அளித்து பட்டாபிஷேகம் என அழைக்கலாமே?”

”ஓ! மும்பை பல்கலைக் கழகம் மும்பை அரசவையாகத் தோற்றம் அளிக்கிறது”

 ”நான் ஏன் மத்திய காலத்துக்குச் செல்ல வேண்டும்.  மேலும் பழமையான உடையான வேட்டி மற்றும் அங்கவஸ்திரத்தைக் கொண்டு வரலாம்.   நமக்கு ராமராஜ்யம் தேவை”

”பட்டதாரிகள் இனி பார்க்க ராஜஸ்தானி ஓட்டல் சர்வர்கள் போல இருப்பார்கள்”

”அப்படியே பட்டச் சான்றிதழை வாழை இலையில் அச்சடித்துக் கொடுக்கலாம்”