டில்லி,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டையை இலையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அக்டோபர் 5-ம் தேதி மற்றும், 16ந்தேதி நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இன்று (23ந்தேதி)க்கு விசாரணையை ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம். இன்றைய விசாரணையின்போது, இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து தேர்தல் கமிஷன் அறிவிக்குமா அல்லது மீண்டும் விசாரணையை ஒத்திவைக்குமா என்பது இன்று மாலை தெரிய வரும்..

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்  சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

அதைத்தொடர்ந்து அதிமுக மற்றும்  இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.

இதற்கிடையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் இறுதிக்குள்  முடிவு எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, மதுசூதனன், பன்னீர் செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி,   புதிதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பி னால் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம் என கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து கடந்த 5ந்தேதி மற்றும் 16ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் விசாரணையை இன்று (23ந்தேதி) ஒத்தி வைத்தது.

இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் இரட்டை இலை விவகாரம் குறித்த விசாரணை நடைபெற உள்ளது.  அதைத்தொடர்ந்து  இரட்டை இலை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையம் உடனே முடிவு எடுக்குமா அல்லது தீர்ப்பை ஒத்திவைக்குமா என்பது  என்பது தெரியவில்லை.

ஆனால்,  மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி இந்த மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க வேண்டியதிருப்பதால், இரட்டை இலை குறித்த தீர்ப்பு இந்த மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.