டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற  லஞ்சம் கொடுத்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள டிடிவி தினகரன், அமலாக்கத்துறை சம்மன் பேரில் நேற்று (12ந்தேதி) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார. அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்தபட்டது.

 2017ஆம் ஆண்டு அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு ஒதுக்கும் வகையில், தேர்தல் ஆணையர்களுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் உள்ளிட்டோர் மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில்,  5 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4ஆம் தேதி (ஏப்ரல்)  வழக்குப்பதிவு செய்த டெல்லி அமலாக்கத்துறை இடைத்தரகர் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியது. அவர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து, டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கனவே சுகேஷ் சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது பெற்றுத்தரக்கோரி, தனக்கு 50 கோடி ரூபாய் கொடுத்ததாகவும்,  25 கோடி ரூபாய் தனக்கு வழங்கியதாகவும் மீதமுள்ள 25 கோடி ரூபாய் கேரள மாநிலத்தில் உள்ள தன் மனைவியிடம் வழங்கியதாக சுகேஷ் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது லஞ்சம் கொடுக்கபட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்க வேண்டாம் என டிடிவி தினகரன் தரப்பு கேட்டுக் கொண்டது. தொடர்ந்து  11 மணி நேர விசாரணை நடைபெற்ற நிலையில்,  நேற்று இரவு முடிந்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தாம் நிரபராதி என்றும், இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது குற்றம் சாட்டினார். மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என்றும் அவர் கூறினார்.