சென்னை:

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொரு வராக அங்கிருந்து விலக மாற்றுக்ககட்சியில் இணைந்து  வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் அங்கிருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக எம்எல்ஏவான, ‘சபாநாயகர் கையை வெட்டுவேன் புகழ்’, அறந்தாங்கி ரத்தினசபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன், டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

கட்சித்தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த சில நாட்களாக கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில், இன்று திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.

அதிமுக அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும் ஏற்கனவே டிடிவிக்கு ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவரது பதவி பறிக்கப்பட இருந்த சமயத்தில் மீண்டும் அதிமுக ஆதரவாளராக மாறினார். இந்த நிலையில், அவரது தம்பி திமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பரணி  கார்த்திகேயன்,  திமுக தலைமை மக்களுக்கும், எனக்கும் பிடித்துள்ளதால் திமுகவில் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இணைந்துள்ளேன் . அமமுகவிலிருந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளனர் என்றும் தெரிவித்தவர்புதுக்கோட்டையில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது அமமுகவில் என்ன பிரச்சினை என்பதை தெளிவாக கூறுவேன்  என்றும் தெரிவித்தார்.