சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை எதிர்த்து சென்னை மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டத்தை நினைவுகூறும் வகையில், மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சென்னை அடையாறில் மக்கள் நீதி மன்றத்தின் நிர்வாகிகள் கூட்டம் கிராமிய இசை நிகழ்ச்சிகளுடன்நடைபெற்றது.  இந்த  நிகழ்வில் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.  நிகழ்ச்சியில்  பாரத் ஜோடோ யாத்திரையில் நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும், கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், இந்தியாவில் மத அரசியலை பாரதீய ஜனதா கட்சி செய்துவருவதாகவும், மதத்திற்குள் பிரிவினை செய்வதை எதிர்க்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக தெரிவித்தார்.

பாஜகவின் மத அரசியல் இந்தியாவை சிதைத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திற்காக தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறியவர், கட்சியின் வளர்ச்சி பணிகள் கூறித்து அவர் பேசும்போது, கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும் என்றும், கட்சி தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், தலைவர் கூறும் கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளி இடங்களில் பேச வேண்டும் என்று கூறியதுடன்,  மாறாக, கட்சி தலைமை கூறுவதற்கு மாறாக செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பொங்கல் பண்டிகை வரவிருக்கும் சூழலில், சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்பட்டு என்றும் கூறினார்.