கர்தலா

திரிபுரா மாநிலத்தில் மாட்டுக்கறி தடையை தமது கட்சி அனுமதிக்காது என பாஜக தலைவர் சுனில் டியோதார் கூறி உள்ளார்.

தேசிய மாதிரிகள் ஆய்வு நிறுவனம் கடந்த 2014ஆம் வருடம் ஒரு கணக்கெடுப்பை நிகழ்தியது.    அந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி உண்போரின் எண்ணிக்கையை ஆராய்ந்துள்ளது.   அந்த கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தில் மாட்டுக்கறி உண்போரின் எண்ணிக்கை 81% ஆக உள்ளது.  அத்துடன் நாகாலாந்தில் 57% பேர் மாட்டுக்கறி உண்பவர்கள் ஆவர்.

இந்த மாநிலங்களில் பாஜக அரசு ஆட்சி அமைத்துள்ளது.   மத்தியில் ஆளும் பாஜக அரசு இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்து உத்தரவிட்டது.   இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதில் மாறுதல்களை மத்திய அரசு கொண்டு வந்தது.   மேகாலயா மாநிலத்தில் பல பாஜக தலைவர்கள் அரசின் இந்த முடிவை எதிர்த்து  கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

நேற்று மேகாலயா மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் சுனில் டியோதர் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார்.   அப்போது அவர், “மக்களுக்கு எதிராக இந்த அரசு எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வராது.   மாநிலத்தில் அதிக விகிதம் உள்ள மக்கள் மாட்டுக் கறி உண்பதை விரும்புகின்ற போது,  இந்த அரசு அவர்களின் விருப்பத்தில் குறுக்கிடாது.   அதனால் பாஜக அரசு இந்த வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக் கறி தடையை அனுமதிக்காது” என தெரிவித்தார்.

மேலும் அவர், “ வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக திரிபுராவில் கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர்.   அவர்கள் மாட்டுக்கறியை விரும்பி உண்ணுபவர்கள்.   அத்துடன் இந்துள்ள இந்துக்களும் மாட்டுக்கறியை உண்ணுகின்றனர்.  அதனால் இந்த மாநிலங்களில் மாட்டுக்கறி தடை வராது”  எனக் கூறி உள்ளார்.

சுனில் டியோதார் முன்பு தீவிர பசு பாதுகாவலர் என்பது  குறிப்பிடத்தக்கது.