திருச்சி: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், 2012 மார்ச், 29ம் தேதி, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளை கடந்த நிலையில், இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் உயிரிரூட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து, திருச்சி பகுதியைச் சேர்ந்த  பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், லட்சுமி நாராயணன், சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் ஆகியோரிடம் சோதனை நடத்த சிறப்பு புலன் விசாரணை குழுவினர் முடிவு செய்து, அவர்களின் உடல்நிலை பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 12 பேரின் மருத்துவ அறிக்கையுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.