சென்னை: சென்னையில் நாளை ஐபிஎல்  போட்டி நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெறும் IPL 2026 போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு, பிரத்யேகமான ‘ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகளை’ வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனம் (CSKCL) ஆகியவை இணைந்து செயல்படுவதைத் தொடர்வதில் மகிழ்ச்சி அடைகின்றன.

இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான IPL 2026 லீக் போட்டியின் 37-வது ஆட்டத்திற்கு, போட்டியைக் காண வருபவர்களுக்காகச் சிறப்பு ‘ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்கள்’ மற்றும் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் இயக்க ஏற்பாடுகள் வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026” லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.

 அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான IPL 2026 லீக் போட்டி எண் 37, ஏப்ரல் 26, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், நுழைவுச்சீட்டில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.   போட்டி நடைபெறும் நாளன்று, மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி (Sunday timetable) இயக்கப்படும். IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது..

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]