மதுரை: கலைமாமணி விருது குழுவை மாற்றி அமையுங்கள் என தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகஅரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் கலைமாமணி விருதுகள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன. ஆளும் தரப்பு ஆதரவாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது நீதிமன்றமும் விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக,  திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில்,  தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு, கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை, கலை வளர்மதி விருதும், 36 முதல் 50 வயது வரை, கலை சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குக் கலை முதுமணி விருதும் வழங்கப்படுகிறது.

கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயது வரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை. 2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளைத் திரும்ப பெற உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  ஆஜரான அரசு வழக்கறிஞர்,  ” 2021 ஆம் ஆண்டு கலைமாமணி விருது முந்தைய அரசால் வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருக பாண்டி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது குறிப்பாக அவசர கதியில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. விழா சான்றில் முறையான கையெழுத்து கூட இல்லை. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்” என வாதாடினார்.

இந்த வழக்கு தொடர்பாக இன்று  தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, 2019-2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா..? தேவைப்படும் பட்சத்தில் புதிய தேர்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் விருது பெற்றவர்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்