சென்னை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

அந்த வகையில் மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: மேடவாக்கம் கூட்டு சாலை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூா் சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலை,செம்மொழி சாலை ஆகியவற்றில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தப் பகுதியில் சோதனை முறையில் ஜூலை 2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது

  • சோழிங்கநல்லூா் சந்திப்பில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பள்ளிக்கரணை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ திருப்பம் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
  • மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பு யூ திருப்பம்  செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும்.
    மேலும், மேடவாக்கம் சந்திப்பு பகுதியில் இருந்து மாம்பாக்கம் சாலை,வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்பாக போக்குவரத்து துறை காவலர்கள் தெரிவித்ததாவது: சோதனை அடிப்படையில் இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் எனவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல போக்குவரத்து துறை காவலர் அனைவருக்கும் இது குறித்து அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.