சென்னை

நாளை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வழியாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அடுத்த வருடத்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கி உள்ளன. அவை மாவட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்தும் பணியிலும் முனைப்புக் காட்டி வருகின்றன.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து களப்பணியை தொடங்கி உள்ளது.  மேலும் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசார நடைப்பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

தனித்துச் செயல்படும் பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.  இப்போதே ஒவ்வொரு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதால் நாடாளுமன்றத் தேர்தல் என்னும் திருவிழா களைக்கட்டத் தொடங்கி இருக்கிறது.

இவ்வகையில் ஆளும்கட்சியான தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆரம்பக் கட்ட பணிகளைத் தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனைகளை முன் நிறுத்தி மக்களை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மூலமாக தி மு க அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பிரசார வியூகம் அமைக்கப்படுகிறது. இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தலை தி.மு.க. வழங்கியுள்ளது.

அதன்படி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. காணொலி காட்சியாக இந்த கூட்டம் நடக்க உள்ளது.  கூட்டத்தில் மாவட்டம் வாரியாக கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கள நிலவரம், தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசப்பட இருக்கிறது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்குக் காணொலி காட்சியாக நடக்கிறது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும்”

என்று கூறியுள்ளார்.