பரிமலை

நாளை மண்டல மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து அய்யப்பனை அப்போது தரிசனம் செய்வார்கள்.

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பிறகு 18-ம் படிக்குக் கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும்.

நாளை மறுநாள்  முதல் அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையைத் திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளைத் தலைமை ஏற்று நடத்தி அன்று நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்குப் பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பிறகு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்குச் சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

நடப்பு சீசனை யொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் நலன் கருதி உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல்லில் சிறப்பு முன்பதிவு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. காவல்துறையினர் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 கட்டமாக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு பாதுகாப்புப் பணிகளுக்காக 7,500 காவல்துறையினர் நியமிக்கப்பட  உள்ளனர்.