நாசிக் 

நாளை மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தைப் பிரதமர் மோடி  திறந்து வைக்க உள்ளார்.

 மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

”நாளை (13/01/2024) பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.15 மணியளவில் நாசிக் சென்று அங்கு 27 ஆவது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிறகு பகல் 3.30 மணியளவில், மும்பையில் அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார்.

பிரதமர் மாலை 4.15 மணியளவில் நவி மும்பையில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் ஏற்கனவே முடிவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்தியாவின் மிக நீளமான இந்த பாலத்துக்கு ‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இத் மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்புப் பாலமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016 டிசம்பரில் இந்தப் பாலத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அடல் பாலம் மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டு சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாக, கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்டது ஆகும்.. இந்தப் பாலம் மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும்.

இந்தப் பால மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும்.  குறிப்பாக இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.