சென்னை,

மிழகம் முழுவதும்  சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.  ஆனால் மார்க் சான்றிதழ் வழங்கும் விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 17ந்தேதி பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள்.

பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள்.

விடைத்தாள்கள் மதிப்பீடு முடிவடைந்து மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் பிறகு மதிப்பெண்கள் சரியாக பதிவு செய்யப்பட்டதா என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

தேர்வு முடிவு கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது.

அந்த முடிவை அனைவரும்

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in  ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் 15-ந் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளிக்கூட மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கூடங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்திற்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக்கூடாது.

விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும், மறுகூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ளவும் இயலும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்வு எழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியா தோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறும்.

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்ப தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.