சென்னை:

நாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத இருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற உள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் நீட் பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்துக்கும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் அனைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த நீட் தேர்வை கடந்த ஆண்டை விட 1.65 லட்சம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். கடந்த ஆண்டு 11.35 லட்சம் பேர் எழுதிய நிலையில் இந்த ஆண்டு 13 லட்சம் பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 82ஆயிரம் மாணவ மாணவிகளை தேர்வை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு 1லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத இருக்கின்றனர்.

தமிழகத்தில் 170 தேர்வு மையங்களில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்கள், நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல் செய்த அறிக்கையில் தமிழகத்தில் 170 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 மாணவர்கள் தேர்வு எழுதுவதாக குறிப்பிட்டிருந்தது

தமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது.  இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த சுமார் 1500 மாணவ மாணவிகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். அவைகள் அனைத்தும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் மாணவர்கள் ஏற்கனவே படித்த பாடத்தில் இருந்து  தலா 45 கேள்விகள் கேட்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் 4 மதிப்பெண் வழங்கப்படும். அதே சமயம், தவறான பதில் அளித்தால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்(Negative marking). ஒரே கேள்விக்கு பல பதில்களை அளித்தாலும், அது தவறான பதிலாகவே கருதப்படும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை)  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

மாணவர்களின் தேர்வு எழுதும் அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், 

தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகள், தேர்வு மையங்களை கண்டறிந்து குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றடைவார்களா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

பிற மாநிலங்களில் தேர்வெழுதினாலும், மாணவர்கள் அவர்கள் தேர்வு செய்த மொழிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.