நாகப்பட்டினம்

நாளை நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க  உள்ளது.

கடந்த 10 ஆம் தேதிமுதல் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கேரள மாநிலம் கொச்சினில் உருவாக்கப்பட்ட செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்திற்கு கடந்த 7ம் தேதி வந்தது.

கடந்த 8 ஆம் தேதி அன்று கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த கப்பல் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்குச் சென்று அங்கிருந்து புறப்பட்டு நாகை திரும்பி வந்தது. பயணிகள் இந்தக் கப்பலில் பயணிக்க, கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம் எனவும் பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களினால் கப்பல் போக்குவரத்து தள்ளிவைக்கப்பட்டு இருந்த நிலையில், நாகையில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து நாளை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.

நாளை ஒரு நாள்மட்டும் தொடக்க நாளை முன்னிட்டு கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை 35 பயணிகள் இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.