மும்பை

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், நேற்று மாலை மீண்டும் மோசமானது., இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.  அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு தரப்பில்  லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன்படி மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.