சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் இபிஸ், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:

விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர் வெற்றிகளைத் தருபவர். விநாயகர் எளிமையான கடவுள், எளியவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கக்கூடிய இறைவன். புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது வெளியில் கொண்டாட புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருக்கும் நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

எடப்பாடி பழனிசாமி / ஓ.பன்னீர்செல்வம்

“வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நற்காரியங்களைத் தொடங்கும் போது, தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரைத் துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றியே விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

முழுமுதற் கடவுளாம் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளாம் விநாயகர் சதுர்த்தி அன்று, களி மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாருக்கு எருக்கம் பூ மாலை அணிவித்து, அவருக்குப் பிடித்தமான சுண்டல், கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, பழங்கள், கரும்பு போன்ற பொருட்களைப் படைத்து, அறுகம் புல், மல்லி, செம்பருத்தி, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து விநாயகப் பெருமானை மக்கள் பக்தியுடன் வழிபடுவார்கள்.

ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயகப் பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தித் திருநாளை விமரிசையாகக் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில் ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டி.டி.வி. தினகரன்:
முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு நல்ல செயலையும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவது வழக்கம் – அந்தளவுக்கு எளிய மக்களின் கடவுளாக, நினைத்ததைப் பிடித்து வைத்து வழிபடக்கூடியவராக, விருப்பப்பட்டபடி எல்லாம் பெயர் வைத்து கொண்டாடப்படுபவராக இருப்பது விநாயகரின் தனிச்சிறப்பு என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

மனவளம், உடல்நலம், சொல்வளம், பொருளாதார மேன்மை என நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் விநாயகரை வழிபட்டால், கிடைக்கும் என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார் – அவரது வாக்கினைப் போலவே இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும் – அமைதியும் அன்பும் உலகில் தழைத்தோங்கட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

சரத்குமார்:

வெற்றியை அருளும் விநாயகர், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு, துவங்கும் தொழில்கள் வெற்றியடையவும், செய்யும் தொழில்கள் பல்கி பெருகி லாபம் ஈட்டவும், எடுத்த செயல்கள் தடைகள் இன்றி நிறைவேறவும் அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறேன். உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியினை சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, ஈஷா அறக்கட்டளை தலைவர் சத்குரு, எர்ணாவூர் நாராயணன் உள்பட  உள்பட தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.