சென்னை

நாளை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

நேற்று நாடாளுமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19 முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.

நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன

நாளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். நாளை மாலை 3 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் கூட்டத்துக்கு வர இயலாதோர் காணொலி வாயிலாகக் கூட்டத்தில் இணைந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளின் பணிகள் குறித்தும், வேட்பு மனு தாக்கலின் போது என்னென்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரி எடுத்துரைப்பார். மேலும் வாக்குச் சாவடிகள் அமைப்பது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு போதிய பயிற்சி கொடுப்பது உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் அவர் விவாதிக்க உள்ளார்.