டில்லி:

சுங்கக் கட்டணத்தை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்றும், அதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் சாலைப்பணிகள் நடைபெற்று வருவதாகவும்  பாராளுமன்றத்தில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர்  நிதின்கட்கரி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

மக்களவையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடை பெற்றது. அப்போது உறுப்பினர்கள் சுங்கச்சாவடி, அதில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு  பதில்அளித்து பேசிய அமைச்சர் நிதின்கட்கரி, நாட்டில் உள்ள சுங்கக்சாவடிகள் அகற்றப்பட மாட்டாது என்று கூறியவர், சுங்க கட்டணம் செலுத்துவோர் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்றும் இதில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் சுங்கச்சாவடிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான்,  கிராமப்புற மற்றும் மலைப்பகுதி சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,  சர்வதேச தரத்தில் சாலை அமைக்க தமது அமைச்சகம் உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்து வருவதாகவும், இது பயங்கரவாத தாக்குதலில் பலியாகுபவர்களை விட அதிகம் என்றும்,சுங்க கட்டணம் கூடும், குறையும், ஆனால் ஒரு போதும் ரத்துசெய்யப்படாது, என்று கூறியவர்,  சுங்க கட்டணம் செலுத்தும் முறை எளிமைப்படுத்தப்படும்  என்றும் தெரிவித்தார்.