சத்தர்ப்பூர்:

மத்திய அரசின் தூய்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பிடம் சமையலறையாகவும், பெட்டிக் கடையாகவும் மாறியிருக்கும் அவலம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் சத்ரப்பூர் மாவட்டத்தில் கோடான் கிராமத்தில் தினேஷ் யாதம் என்பவர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (ஸ்வச்த்தா அபியான்) கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பிடத்தை சமையலறையாக மாற்றியுள்ளார்.

அவரது மனைவி சுசீலா கூறுகையில், ‘‘இந்த திட்டத்தின் கீழ் பணம் எங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த பணத்தை கழிப்பிடம் கட்டும் நபரிருக்கு மாற்றி கொடுத்தோம். ஆனால், அவர் கட்டுமான பணியை முடிக்காமல் உள்ளார். இதனால் நாங்கள் திறந்த வெளி கழிப்பிடத்தை தான் பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

அதே நகரில் டெரி சாலையில் லெட்சுமணன் குஷ்வாலா என்ற தொழிலாளியின் மூத்த மகள் நீலம் கூறுகையில்,‘‘ கழிப்பிடத்துக்கு கட்டப்பட் செப்டிக் டேங்க் மிகவும் சிறியதாக உள்ளது. அதையும் சரியாக கட்டவில்லை. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அந்த இடத்தில் பெட்டிக் கடை திறக்க எனது தந்தை முடிவு செய்தார். 6 மாதங்களுக்கு முன் இது கட்டப்பட்டது. நாங்கள் இன்னும் திறந்த வெளி கழிப்பிடத்தை தான் பயன்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

இது குறித்து சத்தர்ப்பூர் ஆர்டிஓ மவுரியா கூறுகையில்,‘‘ குறிப்பிட்ட அந்த கிராமத்தில் ஏன் கழிப்பிடத்தை சமையலறையாகவும், பெட்டிக் கடையாகவும் மாற்றினார்கள் என்பது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.