சென்னை: மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றும்,  திமுக எம்எல்ஏ இல்ல  திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திமுக சட்டமன்ற உறுப்பினர்  ஆ.கிருஷ்ணசாமி மகள் டாக்டர் ஏ.கே.எஸ்.தாரணி – டாக்டர் எம்.பரத் கெளசிக் ஆகியோரது திருமணத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர், சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, சுய மரியாதை- சீர்திருத்த திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். எமர்ஜென்சியின் போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர். சீர்திருத்த திருமணங்கள் திமுக ஆட்சியில் தான் அங்கீகரிக்கப்பட்டன.

1967-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று கூறிய ஸ்டாலின், என்ன செய்தாலும் பா.ஜ.க. தோல்வியை தவிர்க்க முடியாது என்றவர், தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க IT, ED, CBI உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டு கேட்பதை கையில் எடுத்துள்ளது.

என்ன செய்தாலும் பா.ஜ.க. தோல்வியை தவிர்க்க முடியாது, I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும். மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை ஒன்றிய பாஜக அரசு மிரட்டுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. செய்வதையும் செய்துவிட்டு அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று கூறும் நிலையில்தான் நாடு உள்ளது. ஒட்டுக்கேட்பு புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். 5 மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது. இந்தியாவை காக்க ‘இந்தியா’ கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

மேலும், நாட்டில்,   தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை ஒன்றிய பாஜக அரசு மிரட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.