இன்றைய முக்கிய வர்த்தக செய்திகள் (12.10.2017)

1.   பணமதிப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாக்கம் ஆகியவற்றால் கார்பரேட் நிறுவனங்களில் முதலீட்டுச் செலவு மற்றும் முன்னேற்றச் செலவு ஆகியவற்றில் வரும் 2020 வரை தாமதம் ஏற்படும் என இந்தியா ரேட்டிங்க்ஸ் மற்றும் ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த தாமதமானது பல நிறுவனங்களின் பொதுமக்களின் முதலீட்டை வெகுவாக பாதிக்கும் எனவும் கூறி உள்ளது.  இதனால் பல கார்ப்பரேட் கம்பெனிகள் நீண்ட கால திட்டங்களை மேற்கொள்ள தயங்குவதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

2.   செப்டம்பர் மாதத்தில் ஆயுள் காப்பிடு அல்லாத மற்ற காப்பீடுகளில் பிரிமியமாக ரூ.17,530.64 கோடிகள் வசூலாகி உள்ளன.  கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ரூ.15,428.17 கோடிகள் மட்டுமே வசூலாகி இருந்தது.  இவற்றில் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் முதலிடத்திலும், ஐசிஐசிஐ லம்போர்ட், எச்டிஎஃப்சி எர்கோ, ரிலையன்ஸ் ஜெனரல் ஆகிய நிறிவனங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

3.   இந்தியா வரும் பத்தாண்டுகளில் ஹைட்ரோ கார்பன் பிரிவின் திட்டங்களில் முதலீட்டாக 300 பில்லியன் யு எஸ் டாலர்களை பெறும் என எரிபொருள் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் வரும் பத்தாண்டுகளுக்குள் படிப்படியாக எரிபொருள் இறக்குமதியை முழுவதுமாக குறைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.  இந்தியா விரைவில் மாற்று எரிபொருள் ஆய்வில் முன்னேற்றம் அடையும் எனவும் கருத்து தெரிவித்தார்.

4.   தற்போதுள்ள திவால் விதிகள் கார்ப்பொரேட் கம்பெனிகளை மட்டும் கட்டுப்படுத்துவதாக உள்ளது.  தனிப்பட்ட நிறுவனங்களையும் அந்த விதிகளுக்குள் கொண்டு வர அரசு உத்தேசித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  இது நடந்த பின் தனிப்பட்ட மற்றும் பங்குதாரர்கள் நடத்தும் கம்பெனிகளும் இந்த விதிகளின் கீழ் வரும்.  இதனால் அந்த கம்பெனிகள் ஒழுங்காக நடைபெறுகின்றதா என்பதை அரசால் கண்காணிக்க இயலும் என அந்தத் தகவல் கூறுகிறது.

5.   ரியல் எஸ்டேட் துறையையும் ஜி எஸ் டி விதிகளின் கீழ் கொண்டு வர அரசு உத்தேசித்திருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.  வரும் நவம்பர் 9 ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெற உள்ள ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறி உள்ளார்.  இதன் மூலம் கட்டிடம் வாங்குபவர்கள் ஒரே ஒரு முறை வரி செலுத்தினால் போதும் என்னும் நிலை வரும் என ஜி எஸ் டி கவுன்சில் கூறி உள்ளது.

6.   இந்திய பொருளாதார வளர்ச்சியில் குறைவு ஏற்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இருந்த வளர்ச்சியை விட 0.5% வளர்ச்சி குறையும் எனவும் இது ஜிஎஸ்டி அமுலாக்கம், மற்றும் பணமதிப்பு குறைப்பின் விளைவால் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.  இந்த வளர்ச்சிக் குறைவால் அனைத்து தெற்காசிய நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் கணித்துள்ளது.  ஜி எஸ் டி யினால் 2018 வரை பொருளாதார பாதிப்பு ஏற்படும் எனவும் அதன்பிறகே முன்னேற்றம் ஏற்படும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.