சென்னை

நேற்று ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.

தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேர்வை கூட்டத்தொடரில் நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது.   அதன்பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.   இன்றைய கூட்டத்தில் செய்தித்துறை, கைத்தறி, துணி நூல் துறை, வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்துப் பேச உள்ளனர்.

இதைத் தொடர்ந்து நாளை நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள், சட்டத்துறை, எரிசக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வையும், 8ம் தேதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 9ம் தேதி போக்குவரத்துத் துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, 11ம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது.

முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறையைக் கவனிப்பதால் காவல் துறை மானியக் கோரிக்கையின் போது பேச உள்ளார்.   அதைத் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அவர் வெளியிடுகிறார். இது முதல்வர் துறை என்பதால் காவல்துறையினருக்கு என்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

பிறகு 13ம் தேதி திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மானியக் கோரிக்கை விவாதமும் நடக்கிறது. சட்டப்பேரவைக் கூட்டம் 13ம் தேதியோடு நிறைவு பெறுகிறது.