பூரி

ன்று ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை கோலாகலமாகத் தொடங்கி உள்ளது.

பூரி என்பது ஒடிசா மாநிலத்தில் உள்ள அழகிய கடற்கரை நகரம் ஆகும். ஆண்டுதோறும் இங்கு 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள ஜெகந்நாதர் கோவிலில் ரதயாத்திரை நடைபெறும். இதைக் காண கண்கோடி வேண்டும் என்பார்கள். இக்கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் அவரின் சகோதரர் ஜெகந்நாதர், சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உள்ளது.

ஆண்டுதோறும் 3 மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். இதில் ஜெகந்நாதருக்கு 45 அடி உயர நந்தி கோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்பட்டு 16 சக்கரங்களைக் கொண்ட தேரில் ஜெகந்நாதரும், 14 சக்கரங்களைக் கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள்கின்றனர்

இன்று வண்ணமயமான ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது.  பூரி நகரில் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் பக்தர்களால் இழுத்து செல்லப்பட்டது.  இந்த திருவிழா 10 நாட்க: நடக்கும். பூரியில் இருந்து புறப்படும் ஜெகந்நாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்குச் சென்று ஓய்வு எடுக்கின்றனர்.

அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலைச் சென்றடைந்ததும் ஜெகந்நாதர் ஓய்வெடுப்பார்.  இத்திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகந்நாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகந்நாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவடைய உள்ளது.

தற்போது ஒடிசா மாநிலத்தில் வெயில் கடுமையாக உள்ளது. மக்கள் அனல் காற்று வீசும் நிலையிலும் ரத யாத்திரையைக் காணக் கூட்டம், கூட்டமாக அலைமோதி வருகின்றனர். ரத யாத்திரையின் போது வெயிலின் கடுமையைக் கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.