சென்னை

சென்னையில் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலையில் நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 19-ந் தேதி அன்று 3,43,922 பயணிகளும், 20-ந்தேதி அன்று இதுவரை இல்லாத அளவில் 3,60,743 பயணிகளும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை. 

இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் 28,021 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 20,423 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 18,375 பயணிகளும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 18,113 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கியூ.ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட் போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். 

மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.” 

என்று கூறப்பட்டுள்ளது.