சென்னை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆண்டுகளாக இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இருநாட்டுத் தொடர்களில் விளையாடாமல் இருந்துவரும் சூழலில், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பாகிஸ்தான் அணி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. வருகிற திங்கட்கிழமை இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று இந்த ஆட்டத்திற்காகப் பாகிஸ்தான் அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

சென்னைக்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். ஏற்கனவே நடப்பு உலகக் கோப்பை போட்டிக்காகப் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐதராபாத், அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது, அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.