சென்னை

ன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் தொடங்குகிறது.

திமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இது கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப் பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் தலைமையில் விழாக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழாக்குழுவினர் தி.மு.க. கொடிக் கம்பங்களைப் புதுப்பித்து கொடி ஏற்றுவது, மாவட்டம்தோறும் கருணாநிதிக்குச் சிலைகள் அமைப்பது, 70 வயதுக்கு மேலான மூத்த கட்சி நிர்வாகிகளுக்குப் பொற்கிழி வழங்குவது, தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது, கருத்தரங்கம்-பொதுக்கூட்டம், நூலகங்கள் தொடங்குவது என பல்வேறு நிகழ்ச்சிகளைச் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

தவிர அரசு சார்பிலும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அதில் கருணாநிதியைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரால் பயனடைந்த மக்களை இணைத்து விழாக்களைக் கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று  கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு லோகோ (இலச்சினை) வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.  விழாவில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்., எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.