சின்னப்பா தேவர் 43வது நினைவு தினம் இன்று…

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

“அவர்தான் ப்ரொட்யூசர்.. ஓவரா போட்டு பொளக்காதீங்க வாத்யாரே”

எம்ஜிஆர் தேவர் காம்பினேஷன் படம் என்றால் தியேட்டரில் அப்போதெல்லாம் சண்டைக் காட்சியின்போது நமது குரல் நண்பர்களோடு ஜாலியாக இப்படித்தான் ஒலிக்கும்..

எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர், எல்லா படங்களிலும் வில்லனாக வந்து அவரிடம் அடி வாங்குவார்.. என்ன மாதிரியான வரமோ சாபமோ என்று பல தடவை குழம்பிப் போய் இருக்கிறோம்.

1947 ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். ஏற்கனவே கதாநாயகனாக நடித்து சில படங்கள் பாதியில் நின்று போனதால் நொந்து போயிருந்த எம்ஜிஆருக்கு, ராஜகுமாரி படம் மிக முக்கியமானது.

ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான அந்தப் படம் இயக்குனரான ஏஎஸ்ஏ சாமிக்கும் அதுதான் முதல் படம்.

இதில் என்ன கொடுமை என்றால் தயாரிப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதலால்,படம் மேற்கொண்டு நகருமா என கதாநாயகன் இயக்குனர் இரண்டு பேருக்குமே வாய்ப்பு என்பது ஊசலாடிக் கொண்டிருந்ததுதான்.

அப்படிப்பட்ட நிலையிலும் ஒருத்தருக்காக ஹீரோ எம்ஜிஆர் தயாரிப்பாளரிடம் கடுமையாக வாதாடுகிறார். தன்னுடனான சண்டைக் காட்சியில் அவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று போராடுகிறார்.

தன் வாய்ப்பே தள்ளாட்டம் என்ற நிலையிலும் எம்ஜிஆர் ஒருத்தருக்காக குரல் கொடுத்தார் என்றால் அவர் வேறு யாருமல்ல சாண்டோ சின்னப்பா தேவர் தான். இருவருக்கும் இடையே இடையிலான நட்பு அப்படிப்பட்டது.

வளரும்போது ஜூபிடர், மாடர்ன் தியேட்டர்ஸ் போன்ற பெரிய பேனர்களில் நடித்தாலும் வளர்ந்த பிறகு பெரிய தயாரிப்பாளர்களை கூடுமானவரை தவிர்த்தவர் எம்ஜிஆர்.

ஆனால் அதே மக்கள் திலகம், சாமான்யனான தனது நண்பர் சின்னப்பா தேவரை தூக்கிவிட்டு தொடர்ந்து அவருக்கு தனது படங்களை அதிகஅளவில் தயாரிக்க வாய்ப்பு தந்தார். அப்படியென்றால் சின்னப்பா தேவர் எப்பேர்ப்பட்ட உயர்ந்த மனிதனாக இருக்க வேண்டும்..

சின்னப்பா தேவர் என்கிற மனிதன் எளிமையானவனாகவும் சாமான்யனாகவும் இருக்கலாம். ஆனால் வாக்கு சுத்தமுள்ள, அடுத்து கெடுக்க விரும்பாமல் வாழவைப்பதை மட்டுமே செய்யக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவர்.

படத்தை முடிக்க நீண்டகாலம் எடுத்துக்கொள்வார், அனைத்திலும் தலையிடுவார் என்று பீதியோட பேசப்பட்டவர் எம்ஜிஆர். அதே எம்ஜிஆர் எளிய தயாரிப்பாளர் சின்னப்பா தேவர்முன் அடியோடி மாறிகாட்சியளிப்பார்.

பூஜைபோட்ட அன்றே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் தேவரிடம், கட்டுப்பட்டு எம்ஜிஆர் வருடத்திற்கு இரண்டு படங்கள் என தொடர்ந்து நடித்து குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுத்தார் என்றால் தேவர் எப்பேர் பட்ட கண்டிப்பான பேர்வழியாக இருக்க வேண்டும். நேர்மை இருந்தால்தானே எவரையுமே கண்டிக்க துணிவு வரும்?

சின்னப்பா தேவர் பாணியே தனி. தாய்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின பாசம் என தேவரின் ஐந்து எம்ஜிஆர் படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தவர் சரோஜாதேவி.

திடீரென லைட்டா டாப் ஸ்டார் என பந்தா காட்ட ஆரம்பித்தார். தயாரிப்பாளரான தேவர் அலட்டிக்கொள்ளவேயில்லை.

சரோவுக்கு குட்பை சொல்லிவிட்டு, சாவித்திரியை வேட்டைக்காரனில் எம்ஜிஆருக்கு நாயகியாக்கி வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டே போனார். கே-ஆர், விஜயா, ஜெயலலிதா என அடுத்த கட்ட வரவுகளை நோக்கி போய்க்கொண்டே இருந்தாரே தவிர சரோஜாதேவி பக்கம் அவர் திரும்பவே இல்லை.

எந்த நேரத்திலும் கலங்காத துணிச்சலான மனதை கொண்டவர் தேவர். முதன் முதலில் தயாரித்த தாய்க்குபின் தாரம் படம் மெகா வெற்றி என்றாலும், தெலுங்கு ரைட்ஸ் விஷயத்தில் எம்ஜிஆருடன் தேவருக்கு மனக்கசப்பு..

துணை நடிகராக 45 ரூபாய் சம்பளத்திற்கு ராஜகுமாரி படத்தில் எம்ஜிஆருடன் சண்டை போட்டது முதல் அவ்வளவு நெருக்கமாக பழகிய இருவருமே வாழ்க்கையில் மிகவும் அடிபட்டி நொந்து நூலாகி உயர்வை சந்தித்தவர்கள்..

அதிலும் பாடிபில்டரான தேவர் ஆரம்பத்தில் பால், சோடா, அரிசி வியாபாரம், உள்பட செய்து பார்க்காத தொழில்களே கிடையாது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்ட உழைப்பாளியான தேவர், எம்ஜிஅர் இல்லை என்றானவுடன் கொஞ்சம் கூட களங்கவும் இல்லை தடுமாறவும் இல்லை.

தன் மேல் நம்பிக்கை வைத்து கடன் கொடுத்தவர்களின் முதலீட்டை கொண்டு தனது திரைப் பயணத்தை தொடர்ந்தார்.. சந்திரலேகா பட புகழ் ரஞ்சன், ஜெமினிகணேசன் போன்றவர்களை வைத்து என் வழி தனி வழி என்று போக ஆரம்பித்தார்.

அசோகனை கதாநாயகனாக வைத்து தாய் சொல்லை தட்டாதே படத்தை தயாரித்தபோது கடைசியில் எம்ஜிஆர் தான் தேவரிடம் நட்பை புதுப்பிக்க வேண்டிய ஒரு சம்பவம் நடந்தது.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தனர். படத்தின் கதாநாயகன் அசோகன், அதே படத்தில் வில்லன் ஆக்கப்பட்டார். எம்ஜிஆர் கதாநாயகனாக வந்தார்.

அதுவும் எப்படி? கோட் சூட் கேப் கூலிங் கிளாஸ் என ஒரு காவல்துறை சிஐடி அதிகாரியாக.. இதற்கு முன் அப்படி ஒரு கெட்டப்பை எம்ஜிஆர் தனது படங்களில் போட்டதே கிடையாது..

படத்துக்கு படம் ராஜா வேடத்தில் வாளை சுற்றிக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கு, போலீஸ் மட்டுமின்றி விளையாட்டு வீரர் வக்கீல் டாக்டர் என வேறு தளத்திற்கு கொண்டு சென்றவர் சாண்டோ சின்னப்பா தேவர்..

தீவிர முருக பக்தரான சின்னப்பா தேவர் எப்போது எந்த கல்லை பிள்ளையாராக்கி பணம் கொட்டவைப்பார் என சொல்லவே முடியாது..

அதேபோல அந்த மனுஷனால எப்படி இப்படி தைரியமாக இறங்க முடிந்தது என்றும் வியக்கவைப்பார்.

தமிழை மட்டுமே தெரிந்த கோவைவாசி சின்னப்பா தேவர். ஜெமினி, ஏவிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே எட்டிப்பார்த்து வெற்றிக்கொடி நாட்டி இந்தித் திரையுலகில் அவர் நுழைவார் என யாருமே நினைக்க வில்லை.

இந்தியே தெரியாமல் 1970ல் ராஜேஷ் கன்னாவை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் தேவர்.

ஆராதனா படத்தின் மூலம் ஒவர் நைட்டில் இந்தியா வின் முதல் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்தவர் ராஜேஷ்கன்னா.

ஹாத்தி மேரா சாத்தி என்ற தேவரின் அந்த படத்தின் வசூல் வேகத்தை பார்த்துதான், முதன் முறை யாக இந்தி திரையுலக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றும் வியாபார யுக்தியை ஆரம்பித்தார் ராஜேஷ் கன்னா ..

இந்த படத்திற்கு லக்ஷமிகாந்த்- பியாரிலால் இசைய மைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

மும்பையில் பேச்சுவார்த்தை நடந்த இடத்தில், லக்ஷ்மிகாந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொண்டார்.

உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்க காசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தை யின் தலையில் கொட்டி வாழ்த்தினார்.

லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார்.

அவ்வளவுதான், ”இதோ பாருங்கள் இங்கே வந்திருப் பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்க வந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த் தியுள்ளார்.. இவர் படத்திற்கு இசையமைக்கா விட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.

அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மி காந்த் – பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது..

இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே, தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டுபோய்விட்டார்.

இந்த ஹாத்தி மேரே சாத்திதான் தமிழில் எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம் படமாக ரீமேக்கானது.. எம்ஜிஆருடன் தேவருக்கு கடைசி படம் இதுதான். எம்ஜிஆரை வைத்து தயாரித்த ஒரே கலர் படமும், நல்லநேரம்தான்..

ராஜேஷ்கன்னாவை வைத்து மெகா ஹிட் கொடுத்த, தேவருக்கு புகழ்பெற்ற தர்மேந்திரா ஹேமாமாலினி ஜோடி உறுத்தவே அவர்களுக்கும் ஒரு கதை தயார் செய்தார்.

ராஜேஷ்கன்னா, ஹாத்தி மேரோ சாத்தி படத்தில் தன்னை குழந்தை பருவத்தில் சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றிய யானையையும் அதன் கூட்டத்தை வளர்த்தெடுத்து நன்றி காட்டினார் என்றால், தர்மேந்திராவுக்கும் அதே யானை கதையைத்தான் கொடுத்தார் தேவர்,

ஆனால் இம்முறை தாயிடமிருந்த குட்டியானையை பிரிக்கும் ஒருவனே, கடைசியில் இருவரையும் சேர்ந்துவைக்க கடும் பாடுபடவேண்டியிருந்தது.

மா என்ற பெயரில் வெளியான படம் இந்தியா முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்து வெற்றிபெற்றது.

இதே மா படம்தான் தமிழில் ரஜினியை வைத்து தேவர் குடும்பம் பின்னாளில் அன்னை ஓர் ஆலயம் என எடுத்தது.

பாஷை தெரியாத இந்தியிலே தேவர் இப்படியெல்லாம் சாகசம் செய்தார் என்றால் தமிழில் சும்மா இருப்பாரா?

.

1974- ல் ஒருயொரு பாம்பை வைத்து சிவகுமார்- ஜெயசித்ரா காம்பினேஷனில் வெள்ளிக்கிழமை விரதம் என்ற படமெடுத்து விட்டார். ஒட்டு மொத்த தாய்க்குலமும் பாம்பு செண்டிமென்ட்டுக்கு கட்டுப்பட்டு தியேட்டர் பக்கம் திரும்ப திரும்ப வந்து பணத்தை கொட்டிவிட்டுப்போனது.

ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு என்று படம் கொடுத்து பணத்தை மூட்டை மூட்டையாக கட்டும் வித்தை தேவருக்கு மட்டுமே வசப்பட்ட கலை.

அந்த ஆட்டை ஊர் ஊராய் கொண்டுபோய் பார்வையாளர்களிடம் காட்டி இன்னும் வசூலை வாரிக்குவிக்கும் பிரமோட் கலையிலும் அவர் கில்லாடி. நடிகர் சிவகுமார் தன் வாழ்க்கையில் பார்த்த தனது முதல் பிளாக்பஸ்டர் படம் ஆட்டுக்கார அலமேலுவே.

இன்னொரு பக்கம் தெய்வம் திருவருள், முருகன் அடிமை என தனது விருப்ப தெய்வத்தை போற்றி படங்களாக எடுத்து அவற்றிலும் வெற்றிக்கொடி நாட்டினார் தயாரிப்பாளரான தேவர்.

எம்ஜிஆர், ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, ரஜினி கமல் உள்பட பல டாப் ஸ்டார்கள் யானை, புலி, சிங்கம் பாம்பு, மயில் போன்றவற்றுடன் பேசியே ஆகவேண் டிய கட்டாயத்தை உருவாக்கியவர் தேவர் மட்டுமே.

இன்று உலகநாயகனாக போற்றப்படும் கமல் இளைஞனாக வளர்ந்து முதன் முதலில் பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன் கலாட்டா கம் டூயட் என ஆடிப்பாட வாய்ப்பு பெற்றார் என்றால் அது 1970ல் வெளியான தேவரின் மாணவன் படத்தில்தான்.

1940-களில் முதல் தேவருக்கு அவருடைய திரைப்படத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் சகோதரர் எம்.ஏ.திருமுகம்.

தேவர் தயாரித்த பெரும்பாலான படங்களை டைரக்ட் செய்தது இவர்தான். 1940களில் பல வெற்றிகரமான படங்களுக்கு எடிட்டர் வேலையும் பார்த்தவர் திருமுகம் என்பதையும் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

1967ல் தேவரின் தாய்க்குத் தலைமகன் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நடிகவேள் எம்ஆர் ராதா வால் எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

அவர் உயிர் பிழைப்பாரா மாட்டாரா எஎன லட்சோப லட்சம் மக்கள் தவித்து வந்தனர். இன்னொரு பக்கம் எம்ஜிஆரை நம்பி படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள் கதிகலங்கி போய் இருந்தனர்.

எம்ஜிஆர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றவர்களெல் லாம் பீதியோடு இருக்க, தேவர் செய்த காரியமோ மிகவும் ஆச்சரியமானது.

டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு “சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே” என்று சொன்னார். தன் நண்பன் தன்னை விட்டு போகவே மாட்டான் என்பது அவரது திடமான நம்பிக்கை.

ரஜினியை வைத்து தாய் மீது சத்தியம் படம் தயாரித்துக் கொண்டு இருந்தபோது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இந்த பூமியை விட்டு பறந்தார் தேவர்..

ஐந்தாவது வகுப்புவரை மட்டுமே படித்த சின்னப்பா தேவர், நேர்மையான மனதோடு துணிச்சலாய் சாதித்த சாதனைகளை அவ்வளவு சுலபத்தில் சொல்லிமுடித்து விட முடியாது.

அவரின் 43வது நினைவு தினம் இன்று.