நான்குபேருக்கு தயிர்ச்சாதம் தரமுடியும்தானே உங்களால்?

சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை – தர்ப்பணம்; தானம்!

சார்வரி ஆண்டின் முதல் அமாவாசை  தினம் (22.4.2020). எனவே முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்யுங்கள். வீட்டில் உள்ள இறந்தவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, விளக்கேற்றுங்கள்.

முக்கியமாக, பித்ருக்களை நினைத்து, நான்குபேருக்கேனும் தயிர்சாதமோ சாம்பார் சாதமோ வழங்குங்கள். உங்கள் வம்சம் தழைக்கும். இன்னும் இன்னும் செம்மையாகவும் சிறப்பாகவும் வாழ்வீர்கள்.

நம் பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யவேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். ஒருவருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் அந்தநாட்களில் பித்ரு வழிபாடு மிக மிக அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள். 

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு, ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசை, கிரகண காலங்கள், இறந்தவர்களின் திதி வரும் தினம் முதலான நாட்களில் முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். இந்தநாட்களில், முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் விடவேண்டும்.

பித்ருக்களின் பெயர்களைச் சொல்லி அர்க்யம் விடும்போது, அவை அவர்களுக்குச் சென்றுசேரும் என்றும் அதில் குளிர்ந்து போய், முன்னோர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்றும் வலியுறுத்துகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். 

 இன்றைய தினம் 22.4.2020. அமாவாசை. சார்வரி ஆண்டு பிறந்து வருகிற முதல் அமாவாசை இது. இந்த ஆண்டின் முதல் அமாவாசையைத் தவறவிடாதீர்கள். மறக்காமல், முன்னோருக்கான நம் கடமையை செவ்வனே செய்வோம்.