டில்லி

குடியரசுத் தலைவரைச் சந்திப்பது குறித்து இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்

நேற்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்து கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது.

அதையொட்டி அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு தீவிர  விசாரணை நடந்து வருகிறது,

மேலும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.  காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விரு சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குடியரசு தலைவரைச் சந்தித்து முறையிட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பது தொடர்பாக இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.