சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு  தொடர்புடைய மேலும் 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீடு உள்பட அவரது நிறுவனங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு என 43 இடங்களில் சோதனை நடைத்தப்பட்டது. இதில் 4.87 கிலோ நகைகள், 24 லட்சம் ரூபாய் மற்றும் ஏராளமான ஆவணங்களை  லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று மீண்டும் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, சென்னை நந்தனத்தில் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்த சரவணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சாசன் டெவலப்பர்ஸ் நிறுவத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதுபோல,  சேலத்தில் டாக்டர் செல்வராஜா வீ என்பவரது வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பரமத்திவேலூர்: பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பரமத்திவேலூர், கோலம் கிராமத்தில் உள்ள பி.எஸ்.டி.  தென்னரசு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பி.எஸ்.டி. கட்டுமான நிறுவன உரிமையாளர் தென்னரசு அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.