சென்னை

ன்று சென்னையில் 6 அணிகள் பங்கு பெரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி தொடங்க உள்ளது.

தமிழக அரசு, ஆக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கத்தில் இன்று  முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, 3 முறை சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதி லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி சுற்றான ஆசிய விளையாட்டு இன்னும் 50 நாட்களில் அரங்கேற இருக்கும் நிலையில் நடைபெறும் இந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அனைத்து அணிகளுக்கும் ஆசிய விளையாட்டில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு ஏதுவாக தங்களது திறமையையும், யுக்தியையும் மேம்படுத்த இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நல்லதொரு வாய்ப்பாகும்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக எல்லா அணிகளும் சென்னை வந்து விட்டதுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, ஜப்பானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. இதனையடுத்து மாலை 6.15 மணிக்குத் தொடங்கும் 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரவு 8.30 மணிக்குத் தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 25-வது இடத்தில் இருக்கும் சீனாவை எதிர்கொள்கிறது.