இன்று காலை 7 மணிக்கு 5 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

லக்னோ

இன்று காலை 7 மணிக்கு நாடாளுமன்ற 5 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

நாடெங்கும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26 ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3 ஆம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடை பெற்றது.

இன்று 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.  இன்றைய 5 ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டசபைக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதில் 28 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 35 தொகுதிகளுக்கு இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, வரும் 25ம் தேதி நாடாளுமன்ற 6ம் கட்ட தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தலின்போது 42 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் கண்டே சட்டசபை தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் சிறையில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.