சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்களின் ஹேஸ்டேக் வலியுறுத்தலுக்கு பிறகு, இந்த மாதம் (மார்ச்) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் உறுதி அளித்த நிலையில், இன்று குரூப்-4 தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பது தேர்வர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24ந்தேதி (24.07.2022) அன்று நடத்தியது. இந்த தேர்விற்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர்

ஆனால், தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, , குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. ஆனால், தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில்,   குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் டிவிட்டரில் பதிவிட்டு டிரெண்டிங் செய்தனர்.  #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டது.

இதையடுத்து, ஜ டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட அறிக்கையில், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர் விடைத்தாட்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளம் காணப்பட்டு அவற்றை அலுவலகர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

விடைத்தாட்களில் அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தது. கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை அதிகம். ஓஎம்ஆர்(omr) விடைத்தாள்களின் எண்ணிக்கை 36 லட்சத்துக்கும் கூடுதலாக உள்ளது. இதனால் தாமதமாக கூறியதுடன், மார்ச் மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என உறுதி அளித்தது.

இந்த நிலையில், இன்று  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் Group-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/English/results.aspx இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.