சென்னை: டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய மாற்றம் செய்து  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,   அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையமான  டி.என்.பி.எஸ்.சி.  மேற்கொண்டு வருகிறது. இதற்கு  1 தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பின்மூலம்தான்  காலியாக உள்ள அரசு பணிகளுக்கு தகுந்தவாறு, அவ்வப்போது எழுத்து தேர்வுகள், நேர்முக தேர்வுகளை நடத்தி, பணியாளர் சேர்க்கை  நடத்தப்படுகின்றன. இருந்தாலும்  டிஎன்பிஎஸ்சி பணியாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில்,   அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி,  தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தில் நடத்தப்படும் மூன்றாம் கட்ட தேர்வான நேர்முகத் தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்கள் இனி தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு வழங்கப்படாது. அதற்கு பதிலாக தேர்வாளர்கள் அனைவரும் ஏ.பி.சி.டி போன்ற முதலான எழுத்துக்கள் மூலம் குறியீடு செய்யப்பட்டு தேர்வு செய்யும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறைகளுடன் ஏற்கனவே உள்ள random shuffling முறையும் சேர்த்து பின்பற்றப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்புத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது ஆட்சேர்ப்பில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு உறுதி செய்வதற்கான அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் டி.என்.பி.சி -இன் கொள்கையின்படி, தேர்வாணையம் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், பிறந்த தேதி போன்ற அடையாளத்தை மறைக்க முடிவு செய்துள்ளது.

வாய்வழித் தேர்வுக்குத் தோற்றுவதோடு, விண்ணப்பதாரர்கள் A,B,C,D போன்ற எழுத்துக்களின் பெயர்கள் மூலம் நேர்காணல் வாரியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள்.  இந்த புதிய வெளியீடு ஏற்கனவே இருக்கும் வாய்வழித் தேர்வு ரேண்டம் ஷஃபிளிங் நடைமுறையுடன் சேர்ந்து, வேட்பாளர்களின் பெயர் தெரியாததை உறுதி செய்யும். இது நேர்முகத் தேர்வின் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யும்”.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.