சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு முயற்சித்து வருகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்பது, எதிர்க்கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைமையகமான  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாகவும், மத்தியஅரசு தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் மீது எவ்வாறு பதிலளித்து பேச வேண்டும் என்பது குறித்தும் திமுக எம்பிக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.