சென்னை: நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார்.  காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார்.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வகையில் திமுக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.  மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி வாயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் முகாம் அமைத்து டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவும் நடந்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு 10 நாட்களில் ஆன்லைனில் மட்டும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 906 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், கார்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் என இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்து பதிவு செய்துள்ளனர். இதுதவிர எம்பி, எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் தங்கள் பதிவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்ரத நிலையில்,  திமுக இளைஞரணி தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்,  இன்று திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து,  நீட் தேர்வு விலக்கு இயக்கத்துக்கு  ஆதரவு கோரரி கையெழுத்து பெறுகிறார்.

அதன்படி  காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் சென்று  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து,   கே.எஸ்.அழகிரி நீட் விலக்கு கோரும் இயக்கத்தில்  கையெழுத்திட்டார்.  தொடர்ந்து,  சத்தியமூர்த்தி பவனில்  இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார்.

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருவதால் நிர்ணயித்த 50 நாட்களில் 50 லட்சம் இலக்கை தாண்டி கையெழுத்து பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  50 நாட்­க­ளில் பெறப்­ப­டும் கையெ­ழுத்­து­கள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சேலத்­தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கும் திமுக இளை­ஞர் அணி­ மாநாட்­டில் ஒப்­ப­டைக்­கப்­ப­ட உள்ளது. பின்னர் இது, திமுக தலைமையகமான  அறிவாலயம் வழியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.