சென்னை: அதிக அளவு பயணிகளை ஏற்றி, டிக்கெட் மூலம் வருமானத்தை பெருக்க வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு இலக்கு நிர்ணயம் செய்து  சென்னை போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உள்பட நகர்ப்புறங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்படுவதால், போக்குவரத்து துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதற்கிடையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் எச்சரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தையுல் உதிய உயர்வ உள்பட பல்வேறு சலுகைகள் வழங்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் 14வது ஊதிய ஒப்பந்ததின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இதில் பேமெட்ரிக் முறையில் 5 சதவீத உயர்வு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நலஉதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. இதனால் மேலும் நிதி நெருக்கடி எழுந்துள்ளது.

இதையடுத்து,  அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வருமானம் பெருக்க  இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14 வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ.10 கோடி தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ.3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாகவே வசூலிக்க வேண்டும் எனவும், பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வருவாயை அதிகரிக்கவும் நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்றுமாறும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.